புதுடெல்லி: அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளும் அடுத்த மாதம் பாதுகாப்பு கலந்துரையாடல் கூட்டத்தை எங்கு, எந்த தேதியில் நடத்தலாம் என்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
அந்த நான்கு நாடுகளின் கூட்டத்திற்குப் பிறகு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இருதரப்பு கூட்டம் நடக்கும் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த இரண்டு கூட்டங்களையும் புதுடெல்லியிலேயே அடுத்த மாத பிற்பகுதியில் நடத்தலாம் என்று ஜப்பான் விருப்பம் தெரிவித்து இருக்கிறது.
‘குவாட்’ எனப்படும் இந்த நான்கு நாட்டு பாதுகாப்பு கலந்துரையாடல், ராணுவத் தளவாட வசதிகளைப் பகிர்ந்துகொள்ளும் ஜனநாயக நாடுகளுக்கு இடையில் சாதாரண நிலையில் இடம்பெறும் ஓர் ஏற்பாடாகும்.
இந்த நாடுகள் பயிற்சிகளின் மூலமாகவும் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலமாகவும் சேர்ந்து ஒன்றையொன்று சார்ந்து செயல்படுகின்றன.
இந்திய பசிபிக் கடற்பகுதி வழிகளைச் செயற்கையான தடைகள், கட்டுப்பாடுகள் எதுவுமின்றி சுதந்திரமாக வைத்திருக்க வேண்டும் என்று இந்த நாடுகள் கடப்பாடு கொண்டிருக்கின்றன.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், ஜப்பானிய அமைச்சர் டோஷிமுட்சு மோட்டேகி, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மாரிஸ் பெய்னி ஆகியோர் கலந்துரையாடலில் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய பிரதமர் மாற்றம் இடம்பெற்றதன் காரணமாக இந்தக் கூட்டம் நடக்கும் தேதியும் இடமும் மாற்றமடைந்துள்ளன.
புதுடெல்லியில் இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் மார்க் எப்சரும் சந்தித்துப் பேச திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த நான்கு நாட்டு தற்காப்பு ஏற்பாடு குறிப்பாக எந்தவொரு நாட்டையும் குறிவைத்து இடம்பெறவில்லை என்றாலும் சீனாவின் நிலவரங்களையும் இந்தியப் பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பில் சீனாவின் தாக்கத்தையும் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிகிறது.
இந்தியாவும் ஜப்பானும் அமைச்சர் நிலையிலும் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் வெளியுறவுச் செய லாளர்கள் நிலையிலும் இருதரப்பு பேச்சு நடத்தவும் திட்டம் உள்ளது.