இந்தியாவின் மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் அல்-கொய்தா தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் 9 பேரை அந்நாட்டு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இன்று அதிகாலை மேற்கு வங்க மாநிலத்தின் மூர்ஷிதாபாத்திலும், கேரளாவின் எர்ணாகுளத்திலும் அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் மேற்கு வங்காளத்தில் ஆறு பேரும், கேரளாவில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த மாநிலங்களுக்கு உள்ளே முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மின்னிலக்க சாதனங்கள், ஆவணங்கள், கூர்மையான ஆயுதங்கள், நாட்டு துப்பாக்கிகள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உடல் கவசம், வீட்டில் தயாரிக்கக்கூடிய வெடிக்கும் சாதனங்களை தயாரிக்க உதவும் கட்டுரைகள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்கள் இவர்கள் வசம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள் முர்ஷித் ஹசன், இயாகுப் பிஸ்வாஸ், மொசாரப் ஹுசைன், நஜ்முஸ் சாகிப், அபு சுஃபியான், மைனுல் மோண்டல், லியு இயன் அகமட், அல் மாமும் கமல், அதிதுர் ரஹ்மான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பினால் இவர்கள் தீவிரவாதத்துக்கு இழுக்கப்பட்டதாகவும் இந்தியாவின் பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்களை இந்த அமலாக்க நடவடிக்கை மூலம் தடுத்துள்ளதாகவும் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.