சவூதி அரேபியாவில் 450 இந்தியர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை

சவூதி அரேபியாவில் 450 இந்தியர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை

2 mins read
f66fd798-e9d5-444b-b86c-d3bea176a080
சவூதி அரேபியாவில் 450 இந்தியர்கள் ஜெத்தாவில் உள்ள ஷுமைசி தடுப்புக்காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். படம்: ஊடகத்தில் வெளியான காணொளியிலிருந்து எடுக்கப்பட்டது -

கொவிட்-19 சுழல் காரணமாக, சவூதி அரேபியாவில் வேலையின்றித் தவிக்கும் இந்திய ஊழியர்கள் பலர் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

சவூதி அரேபியாவில் 450 இந்தியர்கள் ஜெத்தாவில் உள்ள ஷுமைசி தடுப்புக்காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். விசா முடிந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் தடுத்து வைக்கப்படுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர்களில் பெரும்பாலானோர் தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், காஷ்மீர், பீகார், டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, ஹரியானா, பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

அந்த தடுப்புக் காவலில் இருப்போரில் 39 பேர் உத்தரப் பிரதேசத்தையும், 10 பேர் பீகாரையும், 5 பேர் தெலுங்கானாவையும் சேர்ந்தவர்கள். மகாராஷ்டிரா, காஷ்மீர், கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா நால்வர், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் ஆகியோரும் அங்குள்ளனர்.

"வேலையின்மை காரணமாக பிச்சை எடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டோம். பிச்சை எடுத்ததைத் தவிர நாங்கள் வேறு குற்றமேதும் இழைக்கவில்லை. இப்போது சிறையில் தவிக்கிறோம்," என்று தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்கள் வெளியிட்ட காணொளியில் குறிப்பிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

அவர்களது வேலை அனுமதி விசா காலாவதியாகிவிட்டதால் அவர்களால் வேலைக்குச் செல்ல இயலாது. அதன் காரணமாக அவர்கள் யசகம் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்று கூறப்படுகிறது.

"பாகிஸ்தான், பங்ளாதேஷ், இந்தோனீசியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்கள் தாயகம் திரும்ப அதிகாரிகள் உதவினர். இந்தியாவிலிருந்து வந்த நாங்கள் மட்டும் இங்கு சிக்கித் தவிக்கிறோம்," என மற்றொருவர் கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 450 பேர் பற்றிய தகவல் இந்தியப் பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, சவூதி அரேபியாவுக்கான இந்தியத் தூதர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் தாயகம் திரும்ப உதவியும் கோரப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவிலிருந்து தாயகம் திரும்ப 2.4 லட்சம் இந்தியர்கள் பதிவு செய்திருந்த வேளையில், 40,000 பேர் மட்டுமே இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்