புதுடெல்லி: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று காலை திடீரென டெல்லிக்கு மேற்கொண்ட பயணம் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் மூன்று தினங்கள் டெல்லியில் தங்கியிருப்பார் என்றும் சில முக்கிய அரசியல் சந்திப்புகளை நிகழ்த்துவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று காலை சுமார் 9.30 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லிக்குச் சென்றார் தினகரன். முன்னதாக அவர் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை.
டெல்லியில் அவர் காங்கிரஸ் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வியை சந்திப்பார் என்று தெரிகிறது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தினகரனுடன் தொடர்புடைய வழக்குகளில் அபிஷேக் சிங்வி முன்னிலையாகி வருகிறார்.
இந்நிலையில் அவ்வழக்குகள் தொடர்பாக விவாதிக்கவும் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக ஆலோசிக்கவும் அபிஷேக் மனு சிங்வியை தினகரன் முதலில் சந்தித்துப் பேச உள்ளார் என அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து அவர் பாஜக தலைவர்கள் சிலரைச் சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் அமமுகவை வலுப்படுத்துவதுடன் அதிமுகவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே டிடிவி தினகரனுடைய திட்டம் என்றும் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களைப் பகைத்துக்கொண்டால் இது சாத்தியமாகாது என்பதை அவர் உணர்ந்திருப்பதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
பாஜக மூத்த தலைவர் ஒருவர் கடந்த இரண்டாண்டுகளாக தினகரனை வெளிப்படையாக ஆதரித்து வருகிறார். எனவே அவர் மூலமாக தினகரன் பாஜக மேலிடத் தலைவர்களை நெருங்கியுள்ளதாகத் தெரிகிறது. இந்த டெல்லி பயணத்தின் மூலம் பாஜகவுடன் தினகரன் தரப்பு நெருக்கமடைய வாய்ப்புள்ளதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட ஐந்து தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. மேலும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அதிமுக தலைமை பிரச்சாரமும் மேற்கொள்ளவில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரையும் கூட அதிமுக தவிர்த்தது. எனவே அதிமுகவை உதறிவிட்டு எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் ஓர் ஆரூடம் அரசியல் களத்தில் நிலவுகிறது.
சசிகலா சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையாகும் பட்சத்தில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையும் வேகம் பெறும் என்று தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.