ஸ்ரீநகர்: லடாக் எல்லையில் மேலும் மூன்று மலை உச்சிகளையும் சில முகடுகளையும் இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
இதனால் சீன ராணுவம் அதிர்ச்சி அடைந்திருப்பதாக இந்திய ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
எல்லையில் நிலவும் பதற்றத்தை தவிர்க்க இரு நாடுகளும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
எனினும் எல்லையில் குவிக்கப்பட்ட படைகளை திரும்பப் பெறுவதில் சீனா சுணக்கம் காட்டி வருகிறது. இதனால் இந்தியாவும் அதே நிலைப்பாட்டை கடைப்பிடிக்கிறது. இந்திய வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், லடாக்கில் உள்ள பல்வேறு முக்கிய மலை முகடுகளை இந்திய வீரர்கள் கைப்பற்றி உள்ளனர். இதனால் சீன ராணுவத்தின் ஒவ்வோர் அசைவையும் இந்தியாவால் கவனிக்க முடியும். இந்நிலையில், சீன ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த மஹர், குருங், மொக்பாரி ஆகிய மூன்று புதிய மலை உச்சிகளையும் இந்திய ராணுவம் கடந்த வாரம் கைப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் எல்லையில் ரஃபேல் போர் விமானங்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. அண்மையில்தான் இந்த விமானங்கள் இந்திய விமானப்படையில் அதிகாரபூர்வமாக இணைக்கப்பட்டன.
லடாக் எல்லையில் நிலவும் பிரச்சினையை திசை திருப்புவதற்காக தென் சீனக் கடல் பகுதியில் சீன ராணுவம் படைகளைக் குவித்து வருவதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது. சீனாவின் இந்த நடவடிக்கை காரணமாக அதன் மீது உலக நாடுகள் அதிருப்தி அடைந்துள்ளன.