பத்து மணி நேரம் நீடித்த விசாரணை; பல தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக தகவல்
புதுடெல்லி: தேசிய புலனாய்வு முகமையால் (படம்) கைது செய்யப்பட்ட அல்கய்டா தீவிரவாதிகளிடம் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சுமார் பத்து மணி நேரம் இந்த விசாரணை நீடித்தது என்றும் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்ததாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமையின் அலுவலகத்தில் வைத்து தீவிரவாதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. கைதான ஆறு பேரும் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதாக புலனாய்வு முகமை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே கேரளாவிலும் மூன்று தீவிரவாதிகள் பிடிபட்டுள்ளனர்.
கைதானவர்களில் ஒருவரான அபு சுபியன் முல்லா என்பவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அங்கு பாதாள அறை இருப்பது தெரியவந்தது. அந்த அறையில் பல டன் அளவு வெடிபொருட்களையும் ஆயுதங்களையும் பதுக்கி வைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து முர்ஷிதாபாத் பகுதி போலிசாரும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
முர்ஷிதாபாத்தின் டோம்கால் பகுதியைச் சேர்ந்த மற்றொரு பயங்கரவாதியான நஜ்மஸ் சாகிப், இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர். அவருக்கும் காஷ்மீரில் உள்ள சமூக விரோதிகளுக்கும் இடையே தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலமானது.
அல் அல் மாமுன் கமால் மதப்பள்ளி நடத்தி வருவதுடன், அங்கு பயிலும் மாணவர்கள் மனதில் தீவிரவாத சிந்தனையை பதிய வைத்ததாகக் கூறப்படுகிறது.
பிடிபட்ட நான்கு பேரின் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்தபோது வருமானத்துக்கு மீறி பெரிய தொகைகளைக் கொண்டு பணப்பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையே கேரளாவில் பிடிபட்ட மூன்று பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் கொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
பின்னர் மூவரையும் தேசிய புலனாய்வு முகமையின் காவலில் வைத்து மூன்று நாட்கள் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையே, நாடு முழுவதும் அடையாளம் காணப்படாத மேலும் பல தீவிரவாதிகள் ஒளிந்திருப்பதாக புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. அவர்களைக் குறிவைத்து தேடுதல் வேட்டை நீடித்து வருகிறது.