கொரோனா கிருமித்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த பள்ளிகளைகத் திறக்க ஏழு மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. அம்மாநிலங்களில் நேற்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
மத்திய அரசு தொடர்ந்து ஊரடங்குத் தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், செப்டம்பர் 21 முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்குச் செல்லலாம் என்றும், ஆசிரியர்களிடம் தேவையான ஆலோசனைகளைப் பெறலாம் என்றும் மத்திய அரசு முன்பே அறிவித்திருந்தது.
அதன்படி ஆந்திரா, அசாம், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், நாகலாந்து மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
முதற்கட்டமாக 15 நாட்களுக்கு வகுப்புகளை நடத்த பள்ளி நிர்வாகங்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
கிருமிப் பரவல் கட்டுக்குள் இருக்கும் பட்சத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்க பள்ளி நிர்வா கங்கள் முடிவு செய்துள்ளன.
பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும், மாணவர்கள் கட்டாயம் வகுப்புகளில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை என்றும் பெற்றோர் விரும்பினால் மட்டுமே வகுப்புகளுக்கு வரலாம் என்றும் மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வகுப்புக்கு வரும் ஒவ்வொரு மாணவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும். கட்டாயம் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும், தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதுடன், கிருமிநாசினியையும் உரிய நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என அரசுத்தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிருமித்தொற்று குறித்த அச்சம் இருந்தாலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.