புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5.5 மில்லியனை நெருங்கியுள்ளது.
எனினும் கொவிட்-19 நோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4.4 மில்லியனாக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது உலகளவிலான மொத்த பாதிப்பில் 19 விழுக்காடு ஆகும். இதன் மூலம் உலகளவில் கொரோனா கிருமிப்பிடியில் இருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை சுமார் 88 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கொவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கிருமி தொற்றியதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுதொடர்பாக மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டுள்ளது.
எனினும் தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா, குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கொரோனா கிருமித்தொற்றால் இரண்டாவது முறையாக பாதிப்பு ஏற்பட்டதா என்பதை இம்மாநிலங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இதனடிப்படையில் இந்தியாவில் அக்டோபர் மாதம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 மில்லியனைக் கடந்துவிடும் என அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகத்தகவல் தெரிவிக்கிறது.
மேலும் அக்டோபர் தொடங்கி அடுத்தாண்டு பிப்ரவரி வரையில் நோய்த்தொற்றுப் பரவல் வேகமாக இருக்கும் என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது.
இந்தியாவில் முப்பது வெவ்வேறு தடுப்பூசிகள் பரிசோதிக்கப்படுவதாகவும் அவற்றுள் மூன்று தடுப்பூசிகள் வெவ்வேறு நிலைகளில் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.