இந்திய கடற்படையைச் சேர்ந்த ரிதி சிங், குமுதினி தியாகி ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் போர் ஹெலிகாப்டரை இயக்கத் தேர்வாகி உள்ளனர்.
இந்தியக் கடற்படை வரலாற்றில் முதன்முறையாக போர் ஹெலிகாப்டர்களை இயக்கும் பொறுப்பு பெண் அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இரு பெண் அதிகாரிகளும் கடற்படையில் துணை லெப்டினென்டாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஐஎன்எஸ் கருடா போர்த்தளவாடத்தின் ஓர் அங்கமான ஹெலிகாப்டர்களை இயக்கும் பணியில் இவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
எதிரியின் தூர இலக்கைக் கண்டறிவது, அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்வது ஆகிய பணிகளை இருவரும் மேற்கொள்வார்கள் என்றும் அதற்கான பயிற்சி அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இந்திய விமானப் படையில் அண்மையில் இணைக்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்களை பெண் அதிகாரி ஒருவர் இயக்கி உள்ளார்.
கடந்த இரு தினங்களாக லடாக் எல்லைப் பகுதியில் இரண்டு ரஃபேல் போர் விமானங்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுத்தப்பட்டன.
அவற்றுள் ஒரு விமானத்தை இயக்கியது பெண் விமானி என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தப் பெண் விமானி குறித்த எந்தவிதமான தகவல்களையும் தற்காப்பு அமைச்சு வெளியிடவில்லை.
இந்திய விமானப் படையின் போர் விமானங்களை இயக்க இதுவரை பத்து பெண் விமானிகள் பயிற்சி பெற்றுள்ளனர்.