கோவை: ஆசியாவின் உயரமான பெண் யானையாகக் கருதப்படும் கல்பனா உடல்நலக் குறைவு காரணமாக கோவையில் நேற்று முன்தினம் உயிரிழந்தது.
அதற்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஏராளமான யானைப் பாகன்களும் வனத்துறையினரும் பங்கேற்றனர்.
விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் நினைவாக இந்த யானைக்குப் பெயர் சூட்டப்பட்டதாக பாகன் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கோவையில் அமைந்துள்ள கும்கி யானைகள் பயிற்சி மையத்தில் வளர்க்கப்பட்ட யானைகளில் கல்பனாவும் ஒன்று.
41 வயதான கல்பனாவை பாகன் பழனிச்சாமிதான் பல ஆண்டுகளாகப் பராமரித்து வருகிறார். யானையின் பெயரை அவர் தன் கையில் பச்சை குத்தி உள்ளார்.
கல்பனாவை தமது குடும்ப உறுப்பினராகக் கருதி வந்ததாகவும் அதுதான் ஆசியாவிலேயே மிக உயரமான பெண் யானை என்றும் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.