புதுடெல்லி: கொரோனா கிருமிப் பரவல் காலத்தில் இந்தியாவில் குடும்ப வன்முறை, குழந்தை கொடுமை போன்றவை அதிகரித்ததாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மார்ச் முதல் செப்டம்பர் 18ஆம் தேதி வரை 4,350 குடும்ப வன்
முறைச் சம்பவங்கள் பதிவானதாக பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிரிதி இரானி கூறினார். இவற்றில் 1,443 புகார்கள் அமைச்சின் வாட்ஸ்அப் எண் வழியாக செய்யப்பட்டு உள்ளதாக மாநிலங்களவையில் அவர் குறிப்பிட்டார்.
“கொவிட்-19 காரணமாக முடக்க நிலை நடப்பில் இருந்தபோது குடும்ப வன்முறை தொடர்பாக பெண்கள் தாராளமாக முன்வந்து புகார் தெரிவிக்க தேசிய பெண்கள் ஆணையம் ஏற்பாடு செய்தது. அதற்காக சமூக ஊடகங்கள் வாயிலாக பிரசாரம் செய்யப்பட்டது. ஏப்ரல் 10ஆம் தேதி 7217735372 என்னும் வாட்ஸ்அப் எண்ணை ஆணையம் அறிமுகப்படுத்தியது. உடனடி யாக உத்தரப் பிரதேசத்தில் இருந்து 190, டெல்லியிலிருந்து 181, மகாராஷ் டிராவில் இருந்து 143 புகார்கள் வந்தன.
“மேலும் காலம் காலமாக வீட்டுக்குள் கொடுமைகளை அனு
பவித்து வரும் பெண்களும் துணிச்சலாக புகார் செய்ய ஆணையம் வசதி ஏற்படுத்தித் தந்தது.
“புகார்கள் கிடைக்கப்பெற்றதுமே பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவர் வசிக்கும் இடத்துக்குரிய காவல்துறை அதிகாரிகளையும் அழைத்து பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடந்த ஆறு மாத காலமாக பெண்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசாங்கம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது,” என்றார் அமைச்சர் இரானி.
தொடர்ந்து, நாடு முழுவதும் நடைபெற்ற குடும்ப வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான கொடுமைகள் ஆகியன குறித்து மாநில வாரியாகவும் மாத வாரியாகவும் அவர் விவரித்தார். தேசிய இணையக் குற்றப்பிரிவு இணையத்தளத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடந்த வன்கொடுமை தொடர்பாக 13,244 புகார்களும் குழந்தைகள் உதவிக்கான இந்திய அறக்கட்டளையில் 3,941 வன்கொடுமைப் புகார்களும் பதிவானதாக அவர் குறிப்பிட்டார்.