அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் 81 ஆண்டு காலமாகச் செயல்பட்டு வந்த தமிழ் பள்ளிக்கூடத்தை மூட மாவட்டக் கல்வி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்தத் தமிழ் மேல்நிலைப்பள்ளியில் படித்த ஏராளமானோர் பல்வேறு அரசுத் துறைகளில் மேம்பட்ட பணிகளில் உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறி பள்ளியை இழுத்து மூட பள்ளிக்கூட நிர்வாகமும் மாவட்டக் கல்வி நிர்வாகமும் முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
அகமதாபாத்தில் வசிக்கும் தமிழர்கள் மாவட்ட கல்வி அலுவலரைச் சந்தித்து தமிழ்ப் பள்ளியை மூட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தும் அந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்கப்படவில்லை. பிரதமர் மோடியின் தொகுதிக்குட்பட்ட மணிநகரில் இந்தப் பள்ளிக்கூடம் உள்ளது.
பள்ளியை மூடினால் படிப்பு வீணாகும் என்று தமிழ் மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் கல்வி அமைச்சரைச் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். இருப்பினும் நேற்று வரை அதற்கான பலன் கிட்டவில்லை.
செப்டம்பர் 23 (நேற்று) நண்பகல் 12 மணிக்குள் மாணவர்கள் பள்ளியில் மாற்றுச் சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தவறினால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம்தான் அச்சான்றிதழைப் பெறமுடியும் என்றும் பள்ளியில் நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி மூடப்படுவதை எதிர்த்து மாணவர்களின் பெற்றோர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளியை மூடும் முடிவுக்கு தமிழ்நாட்டிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.