இந்தியாவில் உள்ள மக்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்று ஓர் அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவின் முன்னணி நிர்வாக உத்தி நிபுணரான பேராசிரியர் ராஜேஷ் கே பில்லானியா என்பவர் தலைமையில் கடந்த மார்ச் முதல் ஜூலை வரை கொரோனா கிருமிப் பரவிக் கொண்டிருந்த வேளையில் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் ‘இந்தியா ஹேப்பினஸ்’ என்னும் அறிக்கையாக வெளியிடப்பட்டு உள்ளது.
மிசோரம், பஞ்சாப், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களே அதிக மகிழ்ச்சியாக இருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது. அதேநேரம் ஒடிசா, சட்டீஸ்கர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள், பட்டியலின் கடைசி இடங்களில் உள்ளன.
முதல் 10 இடங்களில் குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகியன உள்ள போதிலும் தமிழ்நாடு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மகிழ்ச்சியாக இருப்பதற்கும் படிப்பு, வருமானம், திருமண நிலை, வயதுப் பிரிவு போன்றவற்றுக்கும் தொடர்பு இருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
குறிப்பாக, மணமானவர்களே அதிக மகிழ்ச்சியோடு இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மகிழ்ச்சியை அளவீடாகக் கொண்டுத் தயாரிக்கப்பட்ட முதல் அறிக்கை என்று இது கருதப்படுகிறது.