கொரோனா தடுப்பு மருந்தாக மூக்கு வழியாக விடும் சொட்டு மருந்தைத் தயாரிக்கும் ஒப்பந்தத்தை இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் பெற்றுள்ளது.
செலவு குறைப்பு, குறைந்த விலை, அதிக தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு 100 கோடி ‘டோஸ்’ அளவிலான சொட்டு மருந்தை அந்நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த சொட்டு மருந்தை ஹைதரபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கிறது.
இதற்கான ஒப்பந்தம் அந்த பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருந்து தயாரிப்பு மட்டுமின்றி அதன் விநியோக உரிமைகளையும் பாரத் பயோடெக் நிறுவனம் பெற்றுள்ளது.
ஆயினும் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா ஆகிய நாடுகளில் இந்த மருந்தின் விநியோக உரிமையை வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழகமே வைத்துக் கொண்டுள்ளது.
கோவிஷீல்டு, ஸ்புட்னிக் V போன்ற கொரோனா தடுப்பு மருந்துகளை ஊசிகள் மூலம் செலுத்தப்பட வேண்டும். அவற்றுக்கான செலவு அதிகரிக்கும் என்பதால் மூக்கு வழியாக செலுத்தும் சொட்டு மருந்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.
மூக்கு வழியாக விடப்படும் இந்த சொட்டு மருந்து, மூக்கு மற்றும் தொண்டை பாதைகளில் உடனடியாக செயல்படும் என்பதால், முதற் கட்டத்திலேயே கிருமி உடலுக்குள் பரவுவதைத் தடுக்கும் வாய்ப்பு அதிகம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.