புதுடெல்லி: மத்திய கலாசாரத்துறையின் அறிஞர்கள் குழுவில் தமிழ் மொழி சார்ந்த அறிஞர் ஒருவர்கூட இடம்பெறாமல் போனது கவலை அளிப்பதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று முன்தினம் மாநிலங்களவையில் பேசிய அவர், சில யோசனைகளை முன்வைத்தார்.
இதையடுத்து அவரது ஆலோசனையை மத்திய அரசு பரிசீலித்து ஏற்க வேண்டும் என மாநிலங்களவைத் தலைவரும் துணை அதிபருமான வெங்கையா நாயுடு கூறினார்.
மத்திய அரசின் அறிஞர் குழுவில் தென்னக மொழிகள் எவற்றுக்கும் உரிய பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என திருச்சி சிவா சுட்டிக்காட்டினார்.
தமிழ் மொழி இந்தியாவின் மிகத் தொன்மையான மொழி என்றும் ஏராளமான வரலாற்று நிபுணர்கள் தமிழ் மொழி குறித்து ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்ட அவர், தமிழ்மொழி சார்ந்த அறிஞர் ஒருவர் கூட மத்திய குழுவில் இடம்பெறாமல் போனது கவலைக்குரியது என்றார்.
“இந்தியாவில் சிறுபான்மைப் பிரிவினராக உள்ள, குறிப்பாக மலைவாழ் மக்கள், மகளிர், மூன்றாம் பாலினத்தவர், வடகிழக்குப் பிராந்தியப் பகுதிகளில் வசிப்போர் மற்றும் மதரீதியான சிறுபான்மையினர் ஆகியோருக்கான பிரதிநிதித்துவம் அறிஞர் குழுவில் வழங்கப்படவில்லை.
“இந்த இனங்களையும் சேர்த்து ஒருங்கிணைந்த ஆராய்ச்சி செய்தால் தான் முழுமையான வரலாற்றுப் பாரம்பரிய பெருமையைத் தொகுத்து எழுதமுடியும்.
காலனி ஆதிக்கக் காலத்திற்கு முந்தைய இந்தியாவின் வரலாற்றையும் கலாசாரத்தையும் அறிய வேண்டுமானால் இந்த மூன்றையும் சேர்த்து ஆய்வு செய்தால் தான் மிகச் சரியாக அமையும்,” என்றார் சிவா.
ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டுமே மையப்படுத்தி வரலாற்றைத் தொகுத்து எழுதப் போகிறார்களோ என்ற சந்தேகம் எழுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கொண்டாடப்படும் திராவிட இனப் பண்பாடுகள் தொன்மைச் சிறப்புமிக்க தரவுகளைக் கொண்டவை என்றார்.
இதற்கிடையே மத்திய அரசின் கலாசார ஆய்வுக்குழுவை கலைக்கக் கோரி அதிபர் ராம்நாத் கோவிந்துக்கு 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர்.