புதுடெல்லி: இந்திய-இலங்கை உறவு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானவை. அந்த வகையில் இலங்கைக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நேற்று காணொளி வழியாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேயுடன் அவர் பேசினார். அப்போது, இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் இலங்கையில் இந்தியா செய்து வரும் ஏராளமான உள்கட்டமைப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
சில பொருட்களின் இறக்கு மதிக்கு இலங்கை விதித்துள்ள தற்காலிக கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என்றும் இதன் மூலம் இலங்கை பொருளியலுக்கும் பொதுமக்களுக்கும் பயன் கிடைக்கும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித் தார்.தமிழர்களின் எதிர்பார்ப்புகளான சமத்துவம், நீதி, அமைதி, கௌரவம் ஆகியவற்றை உணர்ந்து இலங்கையின் புதிய அரசு செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இரு தலைவர்களும் இரு தரப்பு நிதி ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுதி தெரிவித்தனர்.இலங்கை பொருளியலை மீட்டெடுக்க உதவுவதற்கும் கொரோனா தொடர்பான இடையூறுகளைச் சமாளிப்பதற்கும் இந்தியா 400 மில்லியன் டாலர் பணப் பரிமாற்ற வசதியை இலங்கை மத்திய வங்கிக்கு வழங்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட முக்கிய சின்னமான யாழ்ப்பாண கலாசார மையம் குறித்து இலங்கை பிரதமர் ராஜபக்சே சிறப்பு குறிப்பை ஒன்றை வெளியிட்டார்.இந்த மையத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டதால் அதனைத் திறந்து வைக்க இலங்கைக்கு வரும்படி பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் ராஜபக்சே அழைப்பு விடுத்தார்.