புதுடெல்லி: ஐநா உலக நாடுகள் அமைப்பைச் சீர்திருத்துவதற்கு இதுவே தக்க தருணம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார். இந்தியாவில் இடம்பெற்று வரும் பல மாற்றங்கள் காரணமாக உலக நாடுகளில் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், இந்தச் சூழலில் ஐநாவின் முடிவெடுக்கும் அமைப்புகளில் இருந்து இன்னமும் எவ்வளவு காலத்திற்குத்தான் இந்தியா ஒதுக்கிவைக்கப்படும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஐநா தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆவதையொட்டி அதன் சிறப்பு பொதுச் சபைக் கூட்டம் அமெரிக்காவில் நடந்து வருகிறது. அதில் உலகத் தலைவர்கள் காணொளி முறையில் உரையாற்றி வருகிறார்கள். பிரதமர் மோடியின் உரை பதிவு செய்யப்பட்டு ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் சனிக்கிழமை ஒளிபரப்பப்பட்டது.
அதில் அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். ஐநா மீது இந்தியாவின் 130 கோடி மக்களும் ஈடு இணையற்ற நம்பிக்கை வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட திரு மோடி, ஐநா சீர்திருத்தப்பட்டு அதில் இந்தியாவின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்று இந்திய மக்கள் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
ஐநா அடிப்படை செயல்பாடுகளிலேயே சீர்திருத்தங்கள் இடம்பெற வேண்டும் என்றும் அதற்கு இதுவே தக்க தருணம் என்றும் திரு மோடி குறிப்பிட்டார். ஐநாவை நிறுவிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதையும் இன்று தேவைகளும் சவால்களும் புதியவையாக உள்ளதையும் பிரதமர் உரையில் சுட்டினார்.