இந்தியாவில் கொவிட்-19 கிருமித்தொற்று நாள்தோறும் கூடி வருகிறது என்றாலும் அந்தக் கிருமியின் வீரியம் குறைந்து வருவதற்கான அறிகுறிகள் தெரிவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 26 வரைபட்ட ஒன்பது நாட்களைப் பார்க்கையில் அன்றாடம் புதிதாக கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் சராசரி எண்ணிக்கை நிலையாகக் குறைந்து வந்து இருக்கிறது. கொவிட்-19 தொற்று தலைகாட்டியது முதல் இப்படி ஒரு சூழ்நிலை இதுவரை தோன்றியதே இல்லை.
செப்டம்பர் 17ஆம் தேதி 10.7 லட்சம் கொவிட்-19 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்த எண்ணிக்கை செப்டம்பர் 25ஆம் தேதி 11.2 லட்சமாக உயர்ந்தது என்றாலும் புதிதாக தொற்றுவோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வந்துள்ளது.
செப்டம்பர் 17ஆம் தேதி, ஒரு வார அன்றாட சராசரி எண்ணிக்கை 93,199 ஆக இருந்தது. இது 85,131 ஆகக் குறைந்துள்ளதாக ஐரோப்பிய தொற்றுநோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவிக்கிறது.
இந்நிலையில், சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 93,420 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். அதேவேளையில், அன்று புதிதாக கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை 85,362 ஆக இருந்தது. இந்தியாவில் ஏறக்குறைய 6 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரையில் 70 மில்லியனுக்கும் அதிக பரிசோதனைகள் நடத்தப்பட்டு இருக்கின்றன. ஏறக்குறைய 93,500 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். இறப்பு விகிதம் 1.58 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
கொவிட்-19 பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்றாலும் அந்த நாட்டில் கொரோனா கிருமியின் வீரியம் படிப்படியாகக் குறைந்து வருவதற்கான அறிகுறிகள் தலைகாட்டி இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.
இருந்தாலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தபடி இருப்பதால் முழுமூச்சான விழிப்புநிலை எப்போதும் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.