இந்தியாவில் கொரோனா கிருமி தொற்றியோர் எண்ணிக்கை ஆறு மில்லியனைக் கடந்துவிட்ட நிலையில், அங்கு குணமடைந்தோர் எண்ணிக்கையும் ஐந்து மில்லியனைத் தாண்டியுள்ளது.
அந்நாட்டில் நேற்று முன்தினம் 82,170 பேருக்கு புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 6,074,703 ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில், நேற்றுக் காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 74,893 பேர் தொற்றிலிருந்து மீண்டனர் என்று இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்தது. நாடு முழுவதும் 962,640 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதுவரை 5,016,521 பேர் நலம் பெற்றுள்ளதாகவும் அது குறிப்பிட்டது. அங்கு மொத்தம் 95,542 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏறக்குறைய 1.3 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் கிருமித்தொற்று இன்னும் கூடும் என கூறப்படுகிறது.
வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணியுமாறு நேற்று முன்தினம் மக்களை மீண்டும் வலியுறுத்திய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தக் கட்டுப்பாடுகளே, உயிரையும் காப்பாற்றும் முக்கிய ஆயுதங்கள்,” என்றார்.
தொடக்கத்தில் டெல்லி, முப்பை போன்ற நகரங்களைத் தாக்கிய கிருமி, பின் நாடெங்கும் பரவியது. கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் விதித்த முதல் நாடுகள் ஒன்று இந்தியா. பொருளாதார வீழ்ச்சியையும் மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்களையும் சமாளிக்க இம்மாதத் தொடக்கத்திலிருந்து படிப்படியாக அவை தளர்த்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, ரயில்கள், பேருந்து சேவைகள் தொடங்கிவிட்டன.
இந்நிலையில், கிருமியால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சைஅளிப்பதில் கவனம் செலுத்தவேண்டும் என்று டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) சமூக மருத்துவ பேராசிரியர் ஆனந்த கிருஷ்ணன் கூறினார். “தொற்று சமூகத்தில் ஆழமாக ஊடுருவியுள்ளது,” என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் சொன்னார்.
“இந்நிலையில், செய்யக்கூடிய ஒரே விஷயம், நோய்வாய்ப்பட்டவர்களை கவனித்துக்கொள்வதும் கிருமித்தொற்று உள்ளோரை விரைந்து அடையாளம் கண்டு அவர்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிப்பதுதான். சமூக பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இதற்கு மேல் எதுவும் செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை,” என்றார் அவர்.