மும்பை: விபத்தில் மூளைச்சாவு அடைந்த சென்னை இளைஞரின் கைகள் மும்பையைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டன. இதன்மூலம் இரண்டாண்டுகளுக்குப் பிறகு அந்தப் பெண் புது கைகளைப் பெற்றுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த 23 வயதான மோனிகா கடந்த 2016ஆம் ஆண்டு மின்சார ரயிலில் ஏற முயன்றபோது கீழே தவறி விழுந்து விபத்துக்குள்ளானார். அப்போது கல்லூரி மாணவியாக இருந்த அவர், இந்த விபத்தால் இரு கைகளையும் இழக்க நேரிட்டது. மருத்துவர்கள் அவருக்கு செயற்கைக் கைகளைப் பொருத்தினர். எனினும் இதனால் தமக்கு முழுமையான பலன் கிடைக்கவில்லை என்றும் பல விஷயங்களுக்காக தாம் பிறரைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது என்றும் மோனிகா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு விண்ணப்பித்தார் மோனிகா. ஆனால் பல மாதங்களாகியும் அவருக்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்ததை அடுத்து அவரது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க பெற்றோர் முன்வந்தனர். இதையடுத்து இளைஞரின் கைகள் மோனிகாவுக்குத் தானமாக வழங்கப்பட்டது. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவ்விரு கைகளும் மோனிகாவுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டன. கடந்த ஒரு மாதமாக தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அவர், மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறார்.
“எனக்கு புதிதாக கைகள் பொருத்தப்பட வேண்டும் என்பது என் தந்தையின் கனவாக இருந்தது. எனினும் அது சாத்தியமானதைக் காண அவர் இப்போது இல்லை,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் மோனிகா.