லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 19 வயது இளம்பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக அங்கு செல்ல முயன்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி நேற்று கைது செய்யப்பட்டார்.
அவருடைய சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்திக்கும் ஏராளமான தொண்டர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. பிரியங்காவும் தொண்டர் களும் கைதாயினர்.
"என்னை காவலர்கள் பிடித்து தள்ளி அடித்தனர். நான் கீழே விழுந்துவிட்டேன். தொண்டர்களிடம் கடுமையாக நடந்துகொண்டார்கள், அவர்களையும் தடியால் அடித்தனர்," என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் ஹாத்ரஸ் என்ற மாவட்டத்தில் சண்ட்பா என்ற பகுதியில் சென்ற மாதம் 14ஆம் தேதி பட்டியலின பதின்ம வயதுப் பெண்ணை உயர் சாதியினர் என்று கூறப்படும் நான்கு பேர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுவிட்டனர்.
அதே வேளையில், பால்ராம்பூர் என்ற ஊரில் சிலர் சேர்ந்துகொண்டு கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்து வேறு ஒரு பெண்ணை கொன்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த மாநிலத்தின் புலந்த்ஷாக் மற்றும் அசாம்கர் என்ற மாவட்டங்களில் இரு கிராமங்களில் சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகத் தகவல்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், ஹாத்ரஸ் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு அனுதாபம் கூறுவதற்காக நேற்று ராகுல், தன் சகோதரி மற்றும் தொண்டர்களு டன் காரில் புறப்பட்டார். ஆனால் அதற்கு முன்பாகவே அந்த ஊருக்கு யாரும் செல்லக்கூடாது என்று 144 தடை போடப்பட்டது.
ஆகையால் யமுனா தேசிய நெடுஞ்சாலையில் ராகுல் காந்தி வாகனங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அதையடுத்து ராகுல் காந்தியும் பிரியங்காவும் தொண்டர்களுடன் நடந்தே ஹாத்ரஸ் செல்ல முற்பட்டபோது அவர்கள் கைதாயினர்.
பாலியல் கொடுமைகளை எதிர்த்து புதுடெல்லி, கோல்கத்தா, லக்னோ உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளன.
ஹாத்ரஸ் பெண்ணின் சடலத்தை போலிஸ் அதிகாரிகள் இரவோடு இரவாக எரித்துவிட்டார்கள். இதனிடையே, ஹாத்ரஸ் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது பிரேதப் பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளதாக உத்தரப் பிரதேச கூடுதல் போலிஸ் அதிகாரி பிரசாந்த் குமார் நேற்று தெரிவித்தார்.

