புதுடெல்லி: இந்தியாவில் கொவிட்-19 காரணமாக மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய நேற்று 100,000 ஆகியது.
மொத்த மரணங்களில் 33.7 விழுக்காடு செப்டம்பர் மாதம் இடம் பெற்றன. செப்டம்பரில் மட்டும் 33,255 பேர் மாண்டுவிட்டனர்.
அதேவேளையில், அந்த நாட்டில் கொவிட்-19 வீரியம் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஒரு சாதக நிலவரமாக, ஏறக்குறைய 5.3 மில்லியன் பேர் குணமடைந்துள்ளனர்.
சிகிச்சை பெறுவோரின் அளவு 15.11 விழுக்காடாகக் குறைந்துவிட்டது. மொத்தம் 6.3 மில்லியனுக்கும் அதிக மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதனிடையே, கொவிட்-19 தொற்றுக்கு ஆளானவர்களில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு அந்தக் கிருமியை கொரோனா நோயாளிகள்தான் பரப்பிவிட்டனர் என்று ஆய்வு ஒன்று தெரிவித்தது.
ஆந்திராவிலும், தமிழ்நாட்டிலும் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் அடிப்படையில் பார்க்கையில், இந்தியாவில் கொவிட்-19 கிருமி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளில் சுமார் 8 விழுக்காட்டினர் உட்பட்ட பல நோயாளிகளே அதிக தொற்று பரவலுக்கு மிக முக்கிய காரணம் என்று இந்த ஆய்வு தெரிவித்து உள்ளது.