இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100,000ஐ கடந்துள்ளது.
அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளை அடுத்து, இந்தியாவுக்கு இந்த சிரமநிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் கிருமித்தொற்று கட்டுக்குள் வருவதற்கான எவ்வித அறிகுறியும் தென்படவில்லை என்று இந்திய சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மரண எண்ணிக்கை நேற்று 100,842க்கு அதிகரித்திருப்பதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் மளமளவென உயர்ந்து 6,473,544ஆகப் பதிவாகியுள்ளது.
நேற்று முன்தின நிலவரப்படி மேலும் 79,476 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அன்றாட பாதிப்பு அதிகரிப்பில் இந்தியா முதல் இடம் வகிக்கிறது.
இந்தியாவில் கொவிட்-19 முதன்முதலில் தலைதூக்கியபோது கிருமிப் பரவலை முறியடிக்க கடுமையான முடக்க
நிலையை பிரதமர் நரேந்திர மோடி நடைமுறைப்படுத்தினார்.
அதன் விளைவாக இந்தியாவின் பொருளியல் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
இதனால் பொருளியலை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள இந்தியா, கட்டுப்பாடுகளில் பலவற்றைத் தளர்த்தியுள்ளது.
இந்த வாரத்திலிருந்து திரையரங்குகளை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் திரையரங்குகள் பாதி அளவு மட்டுமே நிரப்பப்படலாம்.
அதுமட்டுமல்லாது, இம்மாத நடுப்பகுதியிலிருந்து பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அதிகாரிகள் முடிவெடுக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் குளிர்காலம் தொடங்கிவிட்டதாலும் அடுத்த மாதம் தீபாவளி கொண்டாடப்பட இருப்பதாலும் கிருமித்தொற்றால் பாதிப்படைவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவின் 1.3 பில்லியன் மக்கள்தொகையில் ஏறத்தாழ 7 விழுக்காட்டினருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக
மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய்த் துறை பேராசிரியர் பிரமார் முகர்ஜி தெரிவித்தார்.
இவ்வாண்டு இறுதிக்குள் இந்தியாவில் 12.2 மில்லியன் பேருக்குக் கிருமித்தொற்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக அவர் கூறினார்.