இந்திய பசிபிக் வட்டாரத்தில் சீனாவின் செல்வாக்கு கூடிவரும் நிலையில், இந்தியா நான்கு நாட்டு தற்காப்பு ஏற்பாட்டை நோக்கி தன் கவனத்தைத் திருப்பி இருப்பதாகத் தெரிகிறது.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளும் இந்திய பசிபிக் வட்டாரத்தைப் பாதுகாப்பான பகுதியாக ஆக்குவதற்குச் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. இந்திய பசிபிக் பகுதியின் பாதுகாப்புக் கோட்பாடுகளுக்கு இந்த நான்கு நாடுகளும் உறுதி தெரிவித்து இருக்கின்றன.
கடல்துறை பாதுகாப்பு, இணையத் தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு வசதிகள், பயங்கரவாத ஒழிப்பு, வட்டார ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பில் இந்த 4 நாடுகளும் பொதுவான இலக்குகளைக் கொண்டு இருக்கின்றன.
ஆகையால் இவை நான்கும் அடங்கிய ஒரு பாதுகாப்பு ஏற்பாடு பலமடைய வேண்டும் என்று இந்தியா விரும்புவதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்திய வெளியுறவு அமைச்சர் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு ஜப்பான் செல்ல உள்ள நிலையில் இத்தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அமைச்சர் ஜெய்சங்கர் நாளையும் நாளை மறுநாளும் ஜப்பானில் இருப்பார் என்றும் அவர் இந்த நான்கு நாட்டுப் பாதுகாப்பு கலந்துரையாடல் தொடர்பான இரண்டாவது அமைச்சர்நிலைக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்றும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
ஜப்பானிய வெளியுறவு அமைச்சருடன் இந்திய அமைச்சர் இரு தரப்பு பேச்சு நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் 2017 முதல் இடம்பெற்று வருகின்றன. 2019ல் நடந்த ஐநா மாநாடு ஒன்றையொட்டி இந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்தார்கள்.
இந்த நான்கு நாட்டு ஏற்பாட்டை நடப்புக்குக் கொண்டு வர இதர நாடுகள் விரும்பும் பட்சத்தில் இந்தியா இதற்குத் தயாராக இருக்கிறது என்று அரசாங்க மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
இத்தகைய ஓர் ஏற்பாட்டை உடைக்கும் முயற்சியாக சீனா ஜப்பானுடன் இரு தரப்பு பொருளியல் உறவைப் புதுப்பித்துக் கொள்ள முயன்று இருப்பதாகவும் அதேவேளையில் இந்த ஏற்பாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா இருப்பதாகவும் இந்திய ஊட கங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ அக்டோபர் 3ஆம் தேதி விடுத்த டுவிட்டர் செய்திகளில், சீனா பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டு உலகப் பொருளியலுக்கு மிரட்டலாக இருப்பதாகத் தெரிவித்தார்.
ஜப்பானிய பிரதமர் சுகாவும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்திய தலைவர்களுடன் பேசி இருக்கிறார். அதற்குப் பிறகு அவர் சீன அதிபர் ஸி ஜின்பிங்கையும் தொடர்புகொண்டதாகவும் இந்த நான்கு நாட்டு ஏற்பாட்டிற்கு ஜப்பானிய பிரதமர் ஆதரவு தெரிவித்ததாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.