சண்டிகார்: உத்தரப்பிரதேசத்தில் கொடூரமான முறையில் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு 19 வயதுப் பெண் கொலை செய்யப்பட்ட விவகாரம் அடங்குவதற்குள் ஹரியானாவில் குர்கானில் 25 வயது பெண்ணை நான்கு பேர் சேர்ந்து பாலியல் கொடுமைப்படுத்தியதாகவும் உடனடியாக நால்வர் கைதானதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில், பாலியல் விவகாரங்களைப் பெரிய அளவில் கையில் எடுக்கும் காங்கிரஸ் கட்சி, உத்தரப்பிரதேசத்தில் கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறி இன்று பல மாநிலங்களிலும் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தப்போவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இவ்வேளையில், உத்தரப் பிரதேசத்தில் அதிபர் ஆட்சியை அமல்படுத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.