இந்தியாவில் பொது முடக்க காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பசியாலும் பட்டினியாலும் மாண்டுகொண்டிருந்த சூழலில் இந்திய உணவுக் கழக கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 1,550 டன்னுக்கும் அதிகமாக உணவு தானியங்கள் வீணாகியிருப்பது பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.
மத்திய பயனீட்டாளர் விவகார அமைச்சு வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த மே மாதத்தில் 26 டன்னும் ஜூன் மாதத்தில் 1,453 டன்னும் உணவு தானியங்கள் வீணாகின. அதற்கடுத்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் முறையே 41 மற்றும் 51 டன் உணவு தானியங்கள் கெட்டுப் போயின.
இவ்வாண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் உணவு தானியங்கள் எதுவும் வீணாகவில்லை என அமைச்சின் தரவுகள் கூறுகின்றன.
பொதுவாக, உணவுக் கழகக் கிடங்குகளில் உணவு தானியங்கள் அறிவியல் முறைப்படி பாதுகாப்பாக சேமித்து வைக்கப்படும் என்றும் புகைமூட்டம் போடுதல், பூச்சிமருந்து தெளித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும் என்றும் அமைச்சு கூறியது.
இத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், இயற்கைப் பேரிடர்களாலும் வாகனங்களில் எடுத்துச் செல்லும்போதும் சிறிய அளவில் உணவு தானியங்கள் பயன்படுத்த முடியாதபடி வீணாகலாம்.
ஆனால், குறிப்பிட்ட அளவிற்குத் தானியங்கள் வீணானது தெரியவந்தால், உடனடியாக அது கவனத்தில் கொள்ளப்படும் என்று அதிகாரிகள் கூறினர். அத்தகைய ஒவ்வொரு நிகழ்வும் விசாரிக்கப்பட்டு, அதற்குக் காரணமான அதிகாரிகள், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
உணவு தானியங்கள் வீணானதற்காக 2014-18 காலகட்டத்தில் கிட்டத்தட்ட 125 அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

