பாட்டியாலா: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கருப்புச் சட்டங்களை இயற்றியுள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் இந்திய விவசாயிகள் மீதான தாக்குதல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக மூன்று நாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ராகுல், நேற்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர் , ஊரடங்கின்போது மோடி அரசாங்கம் நாட்டில் உள்ள சிறு தொழில்களை நசுக்கிவிட்டது என்றார்.
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பே சிறு மற்றும் குறுதொழில்கள்தான் என்று குறிப்பிட்ட அவர், தனது கொள்கைகளைக் கொண்டு கடந்த 6 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஏழைகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
“உணவுக் கொள்முதல் மற்றும் பொது விநியோகத் திட்டத்தை மேம்படுத்துவதற்கான தேவை உள்ளது. இந்த அமைப்பை வலுப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. உணவு தானியங்களைச் சேமிக்க அதிக கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும்.
“குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதற்கான தேவையும் விவசாயிகளுக்கு உள்கட்டமைப்பை வழங்கவேண்டிய தேவையும் உள்ளன,” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
மோடி அரசு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று கூறிய அவர், விவசாயி களையும் தொழிலாளர்களையும் அழிக்கும் பணியைத்தான் மத்திய அரசு செய்து வருவதாகச் சாடினார்.
“பணமதிப்பு இழப்பு, மற்றும் ஜிஎஸ்டி மூலம் வணிகர்களையும் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளையும் மோடி அரசு அழித்துவிட்டதாக மேலும் சாடிய ராகுல், தற்போது வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் கழுத்தையும் மோடி அறுத்து வருவதாக காட்டத்துடன் குறிப்பிட்டார்.
“தொழிலதிபர்களாக உள்ள தனது நண்பர்களுக்காக மோடி அனைத்தையும் செய்து வருகிறார். ஆனால் அத்தொழிலதிபர்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கு வதில்லை.
“ சிறு, குறு, நடுத்தர தொழில் துறைதான் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ஆனால், தனது நடவடிக்கைகளால் இத்துறைகளை அழித்துவிட்டார் பிரதமர் மோடி,” என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
முன்னதாகப் பேசிய பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும் வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு மொத்தமாக அநீதி இழைக்கப்பட்டு உள்ளது என்றார். நாடு முழுவதும் விவசாயப்பணிகள் எவ்வாறு நடக்கின்றன என்பது மோடி அரசுக்கு தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.