கொரோனா கிருமித்தொற்றால் வருமானத்தை இழந்து தவித்த முதியவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் உதவிகள் குவிந்து வருகின்றன.
டெல்லியைச் சேர்ந்த 80 வயதான முதியவர் காந்தா பிரசாத், ‘பாபா கா தாபா’ என்ற பெயரில் சிறிய உணவகம் நடத்தி வருகிறார். தகரக் கொட்டகையின் கீழ் இயங்கிவரும் இந்த உணவகத்தை நடத்துவதில் காந்தாவுக்கு அவரது மனைவி பதாமி தேவி கடந்த முப்பது ஆண்டுகளாக உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில் கொரோனா கிருமித்தொற்றுப் பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை அடுத்து முதியவர் காந்தாவின் உணவகமும் மூடப்பட்டது. பின்னர் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்ட போதும் வியாபாரம் பழையபடி சூடுபிடிக்கவில்லை.
வாடிக்கையாளர்களின் வருகை குறைந்துபோனதால் வருமானம் பாதிக்கப்பட்டது. இதனால் வயதான நிலையில் காந்தா, பதாமி தேவி தம்பதியர் பெரும் தவிப்புக்கு ஆளாகினர்.
இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி கௌரவ் வாசன் என்ற தன்னார்வ செய்தியாளர் ஒருவர் காந்தா பிரசாத்தின் உணவகத்துக்கு வந்துள்ளார்.
உணவகங்கள், சுவையான உணவுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவரும் கௌரவ், முதியவர் காந்தாவின் உணவகத்துக்கு ஏற்பட்டுள்ள நிலையை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
கண்ணீர் விட்டு அழுதபடி முதியவர் காந்தா தனது தற்போதைய நிலை குறித்து விவரிக்கும் காணொளி பார்த்தவர்களை நெகிழ வைத்துள்ளது.
இதையடுத்து அவரது காணொளி வெளியான மறுநாள் காந்தாவின் உணவகத்தில் ஏராளமானோர் குவிந்தனர். இதை காந்தா பிரசாத் தம்பதியர் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.
அன்று முதல் இவரது உணவகத்தில் தயாரிக்கப்படும் அனைத்து உணவு வகைகளும் காலையிலே விற்றுத் தீர்கின்றன.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்தி நடிகர்கள் சுனில் ஷெட்டி, ரன்தீப் கூடா, நடிகைகள் சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர், ரவீணா டாண்டன், அஸ்வின் ரவிச்சந்திரன் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் போன்ற ஏராளமானோர் முதியவர் காந்தா பிரசாத்தின் காணொளிப் பதிவை தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
மேலும் பல பிரபலங்கள் காந்தாவின் உணவகத்துக்கு நேரில் சென்றும் தங்களது ஆதரவைப் புலப்படுத்தி உள்ளனர்.
இத்தகைய ஆதரவால் நெகிழ்ந்து போயுள்ள இத்தம்பதியர் ஒட்டுமொத்த இந்தியாவும் தங்களுடன் இருப்பதாக உணரத் தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளனர்.