திருவனந்தபுரம்: பத்மநாப சுவாமி கோவிலைச் சேர்ந்த பத்து அர்ச்சகர்களுக்கு கொரோனா கிருமி தொற்றியுள்ளது. இதையடுத்து அக்கோவிலில் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக நான்கு மாதங்கள் மூடப்பட்டிருந்த பத்மநாப சுவாமி கோவில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதிதான் திறக்கப்பட்டது.
இந்நிலையில் அங்கு பணியாற்றும் பத்து அர்ச்சகர்கள் உட்பட 12 பேருக்கு கிருமி தொற்றியது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக எதிர்வரும 15ஆம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளதாக கோவிலின் செயல் அதிகாரி அறிவித்துள்ளார்.
தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் கூட கோவில் ஊழியர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு கிருமி தொற்றியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
திருப்பதி கோவிலில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கும் கூட கிருமி தொற்றியுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.
இதேபோல் பூரி ஜெகன்நாதர் கோவிலில் 400க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொவிட்-19 பாதிப்பு இருப்பது அண்மையில் தெரிய வந்துள்ளது.