புதுடெல்லி: இந்தியாவை கொரோனா கிருமித்தொற்றின் இரண்டாவது அலை டிசம்பரில் தாக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. ஐரோப்பிய நாடுகளைப் போலவே ஊரடங்கு தளர்வுகள் காரணமாக கிருமித்தொற்று பாதிப்பு இந்தியாவிலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதே நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை.
"எதிர்வரும் குளிர்காலத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளது. தற்போது நோயின் தாக்கம் சற்றே குறைந்திருப்பதாகத் தோன்றினாலும் இந்நிலை நீடிக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியாது," என்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணர் கிரிதர் பாபு.
இதற்கிடையே கடந்த ஒரு மாதத்தில் முதன்முறையாக கிருமித்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்துக்கும் கீழ் வந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக சுமார் 73 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 883,185ஆக உள்ளது. இதுவரை சுமார் 5.9 மில்லியன் பேர் கொரோனா கிருமி பிடியிலிருந்து விடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 6.97 மில்லியனாக உள்ளது.
இந்நிலையில் பாதிப்பு பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.5 மில்லியனைக் கடந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரேநாளில் புதிதாக சுமார் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.
இதேபோல் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. இதுவரை 107,416 பேர் கிருமித்தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

