இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை ஏழு மில்லியனைக் கடந்துவிட்டது.
முன்னர் ஆறு மில்லியன் என்ற அளவில் இந்த எண்ணிக்கை இருந்தது. 13 நாட்களில் ஒரு மில்லியன் பேர் கூடுதலாகப் பாதிக்கப்பட்டதாக இந்தியாவின் மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நேற்றுக் காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 74,383 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 7.05 மில்லியனாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் மொத்தமாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.67 மில்லியனாக உள்ளது.
இந்தியாவில் கிருமிப் பரவல் கட்டுப்படாமல் போனால் விரைவில் அமெரிக்காவை மிஞ்சி உலகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் முதலிடத்தை இந்தியா தொடும் நிலை உள்ளது.
தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இவ்வாறிருக்க குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை ஆறு மில்லியனைக் கடந்து 6,077,977 ஆக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் குணமடைந்தோர் விழுக்காடு 86.17 ஆக அதிகரித்துள்ளது. எல்லா மாநிலங்களையும் சேர்த்து கொரோனா கிருமித்தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது மருத்துவமனைகளில் 867,496 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டோரில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 12.30 விழுக்காடாகக் குறைந்துவிட்டது.
உயிரிழப்பைப் பொறுத்தவரை இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 918 பேர் மாண்டுவிட்டனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 108,334 ஆக அதிகரித்தாலும் உயிரிழப்பு விகிதம் 1.54 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் இதுவரை 80 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவக் கழகம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை மட்டும் ஒரு மில்லியன் 78 ஆயிரத்து 500 பேரின் சளி, எச்சில் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி 2 மில்லியனைத் தொட்டு தொற்று எண்ணிக்கை அதே மாதம் 23ஆம் தேதி 3 மில்லியனையும் செப்டம்பர் 5ஆம் தேதி 4 மில்லியனையும் அதே மாதம் 16ஆம் தேதி 5 மில்லியனையும் கடந்தது. செப்டம்பர் 28ஆம் தேதி அந்த எண்ணிக்கை ஆறு மில்லியனை எட்டியது.
தொடக்கத்தில் 1 மில்லியன் பேருக்கு தொற்று பரவ 21 நாட்கள் ஆயின. கிருமிப் பரவல் வேகமாக அதிகரித்ததால் 5 மில்லியனிலிருந்து 6 மில்லி யனைத் தொட வெறும் 11 நாட்களே ஆயின.