தங்கக் கடத்தல் விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு சிற்றரசின் தூதரகம் திடீரென மூடப்பட்டிருப்பது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
தங்கக் கடத்தல் தொடர்பாக தூதரக அதிகாரிகளிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த இருந்த நிலையில் தூதரகம் மூடப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
ஐக்கிய அரபு சிற்றரசின் தூதரகம் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்தத் தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி தங்கக் கடத்தல் நடைபெற்றது அண்மையில் அம்பலமானது.
இது தொடர்பாக ஸ்வப்னா உள்ளிட்ட சிலர் கைதாகியுள்ளனர். தூதரகத்தில் 3 ஆண்டுகள் முக்கிய பொறுப்பில் பணியாற்றிய ஸ்வப்னா, பின்னர் கேரள அரசின் விண்வெளிப்பூங்கா திட்டப் பணியில் இணைந்தார். இந்த வேலையில் சேர்ந்த பிறகே தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி அவரும் மேலும் சிலரும் தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது செயலாளர் ஆகியோரின் பெயர்களும் அடிபட்டன.
ஐக்கிய அரபு சிற்றரசின் துணைத் தூதரை கேரள முதல்வர் தமது அதிகாரபூர்வ இல்லத்தில் சந்தித்துப் பேசியதாக வெளியான தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்நிலையில் துணைத்தூதரகத்தில் பணியாற்றும் சிலருக்கும் தங்கக் கடத்தலில் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, அவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர தேசியப் புலனாய்வு முகமை முடிவு செய்துள்ளது.
ஆனால் இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் துணைத்தூதரகம் திடீரென மூடப்பட்டிருக்கிறது. வரும் 20ஆம் தேதி வரை தூதரகம் இயங்காது எனவும் அதுவரை விசா வழங்குவது உள்ளிட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூதரக அதிகாரிகளை விசாரிக்கவேண்டும் என தேசியப் புலனாய்வு முகமை தகவல் தெரிவித்த நிலையில் தூதரகத்தை மூடியிருப்பது சில கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பி இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, துணைத் தூதரகத்தை ஹைதராபாத்துக்கு மாற்ற முயற்சி நடப்பதாகவும் ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது. தூதரக அதிகாரிகள் விசாரிக்கப்படும்போது மேலும் பல முக்கியத் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, தங்கக் கடத்தலில் முக்கியப் பங்கு வகித்த ஸ்வப்னாவுக்கு இந்திய அமலாக்கத் துறை தொடுத்துள்ள வழக்கில் பிணை கிடைத்துள்ளது. எனினும் இவர்மீது காபிபோசா சட்டத்தின்கீழ் சுங்க இலாகா வழக்கு தொடுத்திருப்பதால் பிணை கிடைத்தும் வெளியே வரமுடியவில்லை.
இந்நிலையில் ஐக்கிய அரபு சிற்றரசின் தூதரகப் பெயரைப் பயன்படுத்தி ஸ்வப்னா உள்ளிட்டவர்கள் 19 முறை தங்கக் கடத்தலில் ஈடுபட்டது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.