இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தில் பணியாற்றும் 70க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளுக்குக் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டம் தாமதமடைய வாய்ப்புள்ளதாக அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
ககன்யான் திட்டத்துக்காக 10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விண்வெளிக்கு அனுப்ப இந்திய விமானப்படையைச் சேர்ந்த 4 விமானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு விண்வெளிக்குச் செல்வது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இஸ்ரோவின் பல்வேறு மையங்களில் பணியாற்றிவரும் 70க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதால் ராக்கெட் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணி தொய்வடைந்துள்ளதாக சிவன் தெரிவித்துள்ளார்.
எனவே, குறித்த காலத்துக்குள் ககன்யான் திட்டத்தைச் செயல் படுத்த இயலாத நிலை உருவாகி இருப்பதாகவும் பணிகள் நீடித்து வருவதாகவும் அவர் மேலும் கூறிஉள்ளார்.

