காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு தகுதியை மத்திய அரசு திரும்பப் பெற்றதை ஏற்க இயலாது என அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கிய 370வது பிரிவை மீண்டும் கொண்டுவருவதில் ஒருமித்த கருத்துடைய தரப்புகள் இணைந்து செயல்பட அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் அங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இவர்களில் பலர் படிப்படியாக விடுதலை செய்யப்பட்ட நிலையில் 14 மாதங்களுக்குப் பிறகு மெகபூபா முப்தி விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து ஒரு காணொளிப் பதிவைத் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு எடுத்த முடிவானது ஒரு பகல் கொள்ளையைப் போன்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமாகவும் ஜனநாயக விரோதமாகவும் பறிக்கப்பட்டதைத் திரும்பப்பெற போராடுவோம் என்றும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த காஷ்மீர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண்போம் என்றும் மெகபூபா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவும் அவரது மகன் உமர் அப்துல்லாவும் மெகபூபா முப்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். அப்போது காஷ்மீர் பிரச்சினைக்காக அனைவரும் ஒன்றிணைந்து போராடுவது என முடிவு எடுக்கப்பட்டதாக உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
“தடுப்புக் காவலில் இருந்து விடுதலையான நிலையில் மெகபூபாவின் உடல்நலம் குறித்து விசாரித்தறிய அவரைச் சந்தித்ததாகவும் காஷ்மீர் நலனுக்கான குப்கார் பிரகடனம் தொடர்பாக நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்ததாகவும் உமர் கூறியுள்ளார்.
இந்நிலையில் காஷ்மீரில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் 370வது சட்டப்பிரிவை மீண்டும் அமல்படுத்தக்கோரி மத்திய அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.