இந்தியாவில் உணவுகள் மூலமாகப் பல்வேறு நோய்கள் பரவுவதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் இத்தகைய நோய்களால் ஆண்டுதோறும் 15 பில்லியன் டாலர் அளவிலான பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்.
'சரியான உணவை உட்கொள்ளும் இந்தியா 2050' என்ற இயக்கத்தை மத்திய அரசு தொடங்குகிறது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குத் தலைமையேற்றுப் பேசியபோது ஹர்ஷ்வர்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது குழந்தைகள் மத்தியில் உணவை வீணாக்கும் விகிதம் 21 விழுக்காடாகவும் எடை குறைந்த குழந்தைகள் விகிதம் 36 விழுக்காடாகவும் உள்ளது என்றும் ஹர்ஷ்வர்தன் சுட்டிக்காட்டினார். மேலும் 38 விழுக்காடு குழந்தைகள் மத்தியில் வளர்ச்சி குறைபாடு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் 50 விழுக்காடு பெண்களும் குழந்தைகளும் ரத்தசோகையால் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், ஆண்கள் மத்தியில் உடல் பருமன் அதிகரித்து வருவதாகவும் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில் ஆண்கள் மத்தியில் 9.3 விழுக்காடாக இருந்த உடல் பருமன் விகிதம் தற்போது 18.6 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், இந்த விகிதாச்சாரம் பெண்கள் மத்தியில் 12.6 விழுக்காடு என்பதிலிருந்து 20.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்றார்.
"அதேவேளையில் தொற்றா நோய்கள் காரணமாக ஏற்படும் இறப்புகளும் நாட்டில் அதிகரித்துள்ளன. எனவே, புதிய யுக்திகளை வகுக்கவும் அதற்கேற்ப செயல்களை ஒருங்கிணைக்கவும் இலக்கை அடைவதற்கும் பொதுவான தளம் தேவைப்படுகிறது.
"அத்தகையதொரு தளத்தை அமைப்பதற்கு அனைவரும் இணைந்து செயல்படவேண்டி உள்ளது," என்று ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
மேலும், உணவு வாயிலாகப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பொருளாதார இழப்புகளைக் குறைக்கமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதைச் சாத்தியமாக்கவே இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் 2050 வரை செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

