பெங்களூருவின் கேஆர் புரத்தில் உள்ள கல்விக் கழகம் ஒன்றில் பொறியியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தார் கொல்கத்தாவைச் சேர்ந்த சௌவிக் சட்டர்ஜி.
அவருடைய வகுப்பைச் சேர்ந்த ஷஷாங்க் தாஸ் என்பவரும் அதே பள்ளியில் முதுகலைப் பட்டக் கல்வி பயின்றுகொண்டிருந்த ஜிதேந்திர குமார் சாஹு என்பவரும் நண்பர்கள்.
தற்போது 29 வயதாகும் தாஸ் அசாமைச் சேர்ந்தவர். தற்போது 32 வயதாகும் சாஹு ஒடிசாவைச் சேர்ந்தவர். தற்போது இருவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
சட்டர்ஜியின் நெருங்கிய தோழி ஒருவர் மீது தாசுக்கு ஈர்ப்பு இருந்தது. அந்தப் பெண்ணும் அதே வளாகத்தில் படித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் அந்தப் பெண் மீதும் சட்டர்ஜியின் தாயார் பற்றியும் தாஸ் தவறாகப் பேசியதால் அவருடனான நெருக்கத்தை சட்டர்ஜி குறைத்துக்கொண்டார்.
ஆனால், 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி காலை 9 மணியளவில் கேஆர் புரத்துக்கு அருகில் உள்ள ஹிரந்தஹல்லியில் சட்டர்ஜி வசித்து வந்த வாடகை வீட்டுக்குச் சென்ற தாஸ், தம்முடைய தவறான நடத்தைக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார். பேச்சு வாக்கில் அவரை அந்தக் கட்டடத்தின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்ற தாஸ், அங்கிருந்த சாஹு மற்றும் அடையாளம் தெரியாத மேலும் இருவர் ஆகியோருடன் சேர்ந்து கீழே தள்ளி விட்டார். அது ஒரு மூன்று மாடிக் கட்டடம்.
தலையில் அடிபட்ட சட்டர்ஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்; அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து, 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சுய நினைவை அடைந்த சட்டர்ஜி, தமக்கு நேர்ந்ததை நினைவுகூர்ந்தார். ஆயினும் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் அவர்.
கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தாஸ் மீதும் சாஹு மீதும் குற்றவியல் தண்டனைச் சட்டம் 307ன் கீழ் வழக்கு பதிவு செய்தார் சௌவிக் சட்டர்ஜியின் தந்தை.
தாசையும் சாஹுவையும் 2012ஆம் ஆண்டில் போலிஸ் கைது செய்தது. ஆனால், இருவரும் பிணை பெற்று வெளியில் இருந்தனர்.
தற்போது இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு தற்போது இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.