அன்றாடம் கொவிட்-19 நோய்த்தொற்றுச் சம்பவங்களைப் பதிவு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது நிலைக்கு இறங்கியுள்ளது. உலகிலேயே ஆக அதிகமான நோய்த்தொற்றுச் சம்பவங்களைப் பதிவு செய்துள்ள அமெரிக்கா, மீண்டும் முதல்நிலைக்குத் திரும்பியுள்ளது.
ஆகஸ்ட் 6ஆம் தேதியிலிருந்து ஒவ்வொரு நாளும் உலகிலேயே ஆக அதிகமான நோய்த்தொற்றுச் சம்பவங்களை இந்தியா பதிவு செய்து வந்தது.கடந்த வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாட்களாக இந்தியாவைவிட அதிகமான நோய்த்தொற்றுச் சம்பவங்களை அமெரிக்கா பதிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த வியாழக்கிழமை 66,131 பேருக்கும் வெள்ளிக்கிழமை 71,687 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாறாக, இந்தியாவில் கடந்த வியாழக்கிழமை 64,237 பேருக்கும் வெள்ளிக்கிழமை 62,587 பேருக்கும் தொற்று உறுதியானது.
இரு மாதங்கள், 11 நாட்களுக்குப் பிறகு உலகிலேயே ஒரேநாளில் ஆக அதிகமான நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அமெரிக்காவில் கடந்த வியாழக்கிழமை பதிவாகின. அதுவரை இந்தியாதான் பட்டியலில் முதலிடம் வகித்து வந்தது.
அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 8.3 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் அந்த எண்ணிக்கை 7.5 மில்லியனாக உள்ளது.அடுத்த ஒரு சில நாட்களுக்கு அமெரிக்காவில்தான் ஆக அதிகமானோருக்கு அன்றாடம் தொற்று உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இணையத்தளம் குறிப்பிடுகிறது. அமெரிக்காவில் கடந்த மாதம் நோய்த்தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதும் இந்தியாவில் தொற்று படிப்படியாகக் குறைந்து வருவதும் அதற்குக் காரணம்.
இந்தியாவில் செப்டம்பர் 17ஆம் தேதி நோய்த்தொற்று உச்சத்தை எட்டியது. அன்றைய தினம் 98,000க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகி இருந்தன. அதைத் தொடர்ந்து அந்நாட்டில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.
மாறாக, அமெரிக்காவில் மூன்றாவது நோய்த்தொற்று அலை எழுந்துள்ளதாகத் தெரிகிறது. குறிப்பிடும்படியாக, இந்தியாவில் நோய்த்தொற்று இறங்குமுகம் காணத் தொடங்கிய அதே செப்டம்பர் மாத நடுப்பகுதியில்தான் அமெரிக்காவில் நோய்ப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. அமெரிக்காவில் இதுவரை ஏறத்தாழ 223,000 பேர் கொவிட்-19க்கு உயிரிழந்துவிட்டனர். இந்தியாவில் இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை ஏறக்குறைய 114,000 ஆக உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் மேலும் 61,871 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது. ஒரேநாளில் 1,033 பேர் நோய்த்தொற்றால் உயிரிழந்தனர். இரு வாரங்களுக்குப் பிறகு இந்தியாவில் கொவிட்-19க்கு ஒரேநாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000ஐ கடந்து இருக்கிறது.