கொரோனா கிருமித்தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பணிக்கு வராமல் விடுப்பு எடுத்த 385 மருத்துவர்களை கேரள அரசு பணிநீக்கம் செய்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை அரசு மருத்துவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கொரோனா காலத்தில் மருத்துவர்கள் செவிலியர்களின் பணி மிகவும் முக்கியமானது என்றும், அவர்களின் சேவை அவசியம் தேவை என்றும் கேரள சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் ஏராளமான மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் அதிகாரபூர்வமற்ற விடுப்பு எடுத்திருப்பதாக அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
385 மருத்துவர்கள் உள்பட 432 மருத்துவப் பணியாளர்களுக்கு இறுதி எச்சரிக்கை அளித்தும் பணிக்கு வரவில்லை என்றும், இதன் காரணமாகவே பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் சைலஜா விளக்கம் அளித்துள்ளார்.
பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள், மருந்தாளுநர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், ரேடியாகிராஃபர்கள் ஆகியோரும் அடங்குவர் என அவர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் முன் எப்போதும் இல்லாத மருத்துவ அவசரநிலையை, சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் சைலஜா, சுகாதாரத்துறை முழுவீச்சில் கொரோனா கிருமித்தொற்றை எதிர்த்துப் போராடி வருவதாக கூறியுள்ளார்.
“இந்த நேரத்தில் தேவையின்றி விடுப்பு எடுத்து பணியைச் செய்யாமல் இருப்பது ஒழுக்கக்கேடாகும். பணி செய்யும் மற்ற பணியாளர்களின் நேர்மையையும் இத்தகைய போக்கு குலைத்துவிடும்.
“இதே போல் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் தொடர்ந்து நடந்துகொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என அமைச்சர் சைலஜா எச்சரித்துள்ளார்.
முன்னதாக அதிகாரபூர்வமற்ற விடுப்பில் சென்ற 46 மருத்துவர்களுக்கு உடனடியாக பணிக்குத் திரும்பும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அவர்கள் அதைப் பொருட்படுத்தாததால் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வேளையில் விடுப்பு எடுத்ததால் நடவடிக்கை