இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தைக் கடந்துவிட்டதாகவும், கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தால் கொரோனா பரவல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கட்டுக்குள் வரும் என்றும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது 30 விழுக்காட்டினருக்கு மட்டுமே கொரோனா கிருமித் தொற்றுக்கான எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பதாகவும் குளிர்காலம் மற்றும் பண்டிகைக் காலம் வருவதால், கவனக்குறைவாக இருந்துவிட்டால் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அந்தக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் கொரோனா கிருமி பாதிப்பைக் கண்காணிக்கவும் அதைக் கட்டுப்படுத்தவும் ‘இந்திய தேசிய சூப்பர்மாடல்’ என்ற பெயரில் நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
இதில் ஐஐடிகள் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்ற அதிகாரிகள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
எனவே, பாதுகாப்பு நடைமுறைகளை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என அக்குழு வலியுறுத்தியுள்ளது.
இப்போது நாடு முழுவதும் கிருமித் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 75 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா கிருமி பாதிப்பு முடிவுக்கு வரும்போது இந்த எண்ணிக்கை 1.05 கோடியாக உயர வாய்ப்பு உள்ளது என்றும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால், தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தைக் கடந்திருக்கும் என்றும் தற்போது அந்த எண்ணிக்கை 1.14 லட்சமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளைப் பொதுமக்கள் கடைப்பிடிக்கும் பட்சத்தில் இனிமேல் பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமிருக்காது எனவும் நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது.