வடக்கு மகாராஷ்டிராவின் ஜால்கோவன் பகுதியில் நான்கு இளம் சிறுவர்கள் கோடரியால் தாக்கப்பட்டு மிகவும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதன் தொடர்பில் மக்கள் மிகுந்த கோபத்துக்குள்ளாகி இருக்கின்றனர். கொல்லப்பட்ட நால்வரும் உடன்பிறந்தவர்கள்.
அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகியிருப்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட சிறுவர்களில் 13, 6 வயதுகளில் இருந்த இருவர் சிறுமிகள்; 11, 8 வயதுகளில் இருந்த இருவர் சிறுவர்கள்.
கடந்த வியாழக்கிழமை இந்தக் கொடூரமான செயல் நிகழ்ந்த நிலையில், குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இது அப்பகுதி வாசிகளிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நிகழ்ந்த பகுதியை கடந்த சனிக்கிழமை பார்வையிட்ட மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என்றார்.
ரேவர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தின் தோட்ட வீட்டில் சிறுவர்கள் கடந்த வியாழக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜால்கோவன் நகரிலிருந்து 66 கிலோ மீட்டர் தொலைவில் அந்த கிராமம் அமைந்துள்ளது.
மறுநாள் காலையில் அந்த வீட்டின் உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் போலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
சிறுவர்கள் நால்வரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.
உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்குக்கு அந்தப் பிள்ளைகளின் பெற்றோரும் மூத்த சகோதரனும் செல்ல வேண்டிய சூழலில், மூத்த சகோதரனின் நண்பர்களது பாதுகாப்பில் இந்த 4 பிள்ளைகளும் விடப்பட்டனர்.
குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான போக்சோ சட்டத்தின்கீழ் கற்பழிப்பு மற்றும் கொலைக் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.