இந்தியாவின் ஹைதராபாத் நகரில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அண்மைய ஆண்டுகளில் இப்படிப்பட்ட மோசமான வெள்ளத்தை ஹைதராபாத் எதிர்நோக்கியதில்லை என போலிசார் தெரிவித்தனர். இதில் குறைந்தது மூன்று பேர் உயிரிந்தனர். மாண்டவர்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குவர்.
கடந்த நூறாண்டுகளில் ஹைதராபாத் கண்டிராத கனமழையால் ஏரிகளும் நதிகளும் நிரம்பி, சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. ஹைதராபாத் நகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது.
வெள்ளம் காரணமாக மொத்தம் 37,409 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் வசிப்பவர்களை அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றும் பணியில் ஹைதராபாத் நகராட்சி மன்ற அதிகாரிகளும் மீட்புப் பணியாளர்களும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
பல குடியிருப்புக் கட்டடத் தரைத்தளங்களில் வெள்ளநீர் புகுந்தது. முழங்கால் உயரத்துக்கு தண்ணீர் இருந்ததாகவும் இந்திய ஊடகம் தெரிவித்தது.
ஆட்டோ ரிக்ஷாக்களை வெள்ளம் அடித்துக்கொண்டு செல்வதைக் காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் வெள்ளநிலை மோசமாக இருக்கிறது.
வெள்ளத்தில் மூழ்கியுள்ள இடங்களில் சிக்கித் தவிப்போரை மீட்கும் பணியில் இந்திய ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பைச் சேர்ந்த மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள சில கிராமங்கள் வெள்ளத்தில் முழுமையாக மூழ்கிவிட்டதாக கர்நாடக முதல்வர் பிஎஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
நாளை ஹெலிகாப்டரில் சென்று அவ்விடங்களைப் பார்வையிட்டு அடுத்தகட்ட நடவடிக்கையைத் விரைவில் நடைமுறைப்படுத்தப் போவதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.