பாகிஸ்தான் உளவு அமைப்புக்குத் தொடர்பு உள்ளதாக புலனாய்வு முகமை சந்தேகம்
திருவனந்தபுரம்: கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பில் மாநில அரசின் முன்னாள் முதன்மைச் செயலர் சிவசங்கர் எந்நேரத்திலும் கைதாக வாய்ப்புள்ளது என வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தங்கக் கடத்தலில் அவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதற்குரிய ஆதாரங்கள் சுங்கத்துறையிடம் இருப்பதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு சிற்றரசின் தூதரகப் பெயரைப் பயன்படுத்தி தங்கக் கடத்தல் நடந்தது அண்மையில் அம்பலமானது. இது தொடர்பாக கேரள அரசு அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட பலர் கைதாகினர்.
இந்தக் கடத்தலில் கேரள முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கருக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டது. சிவசங்கருடன் தனக்கு இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி ஸ்வப்னா அவரிடம் பல்வேறு உதவிகளைக் கேட்டுப் பெற்றதாகவும் தெரிகிறது.
கடந்த சில வாரங்களாகத் தங்கக் கடத்தல் குறித்து மத்திய அமலாக்கத் துறையும் சுங்கத்துறையும் தீவிர விசாரணை நடத்தி வந்தன. சிவசங்கரிடம் தேசியப் புலனாய்வு முகமையின் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
இக்கடத்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் பெயரும் அடிபட்டது. எனினும் தமக்கு இதுகுறித்து ஏதும் தெரியாது என முதல்வர் தரப்பில் திட்டவட்டமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானதை அடுத்து தமக்கு முன்பிணை வழங்கக் கோரி திருவனந்தபுரம் உயர்நீதிமன்றத்தை அணுகினார் சிவசங்கர். அக்டோபர் 23ஆம் தேதி வரை அவரைக் கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் நெஞ்சுவலிப்பதாக சிவசங்கர் கூறியதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அதே மருத்துவமனையில் அவரது மனைவி மருத்துவராகப் பணியாற்றுகிறார்.
பரிசோதனையில் சிவசங்கருக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏதும் இல்லை என்று உறுதியானது. எனினும் முதுகுத் தண்டுவடத்தில் பிரச்சினை உள்ளதாகக் கூறி திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அம்மருத்துவமனையை தேசியப் புலனாய்வு மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் சிவசங்கர் சிகிச்சை பெறும் பிரிவு உள்ள பகுதியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும் இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்பிணை நீட்டிக்கப்படாத அல்லது சிகிச்சை முடியும் பட்சத்தில் சிவசங்கர் அதிரடியாகக் கைது செய்யப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே கேரள பாணியில் ராஜஸ்தான், டெல்லியிலும் அண்மையில் தங்கக்கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இரு மாநிலங்களிலும் சேர்த்து நூறு கிலோவுக்கும் மேற்பட்ட கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்தக் கடத்தலுக்கும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காகவும் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவும் வகையிலும் இந்தத் தங்கக் கடத்தல்கள் அரங்கேறி வருவதாக புலனாய்வு அமைப்புகள் சந்தேகிக்கின்றன.
இந்தக் கோணத்திலும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.