லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை கடந்த 20 ஆண்டுகளாக முடங்கிக் கிடப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நிதிப்பற்றாக்குறையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுவதை அடுத்து தமிழ்த் துறைக்கு உயிரூட்ட புலம்பெயர் தமிழர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
லண்டன் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட முதலாம் ஆண்டிலேயே 20 மொழித் துறைகளில் ஒன்றாக தமிழ்த் துறையும் தொடங்கப்பட்டது. அங்கு தமிழில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்கான கல்வியை மேற்கொள்ளும் வசதி இருந்தது.
பல்கலைக்கழக நூலகத்தில் தமிழ் தொடர்பாக 150,000 ஆவணங்கள், ஓலைச்சுவடிகள் மற்றும் நூல்கள் உள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் தமிழில் இளங்கலை பட்டம் பெற்ற முதல் ஆங்கிலேயரான எம்.எஸ்.எச். தாம்சன், மறைமலை அடிகளின் மாணவராவார்.
கடந்த 2000ஆம் ஆண்டில் தமிழ்த் துறை மூடப்பட்டது. எனவே, இத்துறைக்கு மீண்டும் உயிரூட்டும் முயற்சியில் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் பலர் ஒருங்கிணைந்து ‘ஐக்கிய ராஜ்ய தமிழ்க் கல்வி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
லண்டன் பல்கலைக்கழக தமிழ்த் துறையை மீண்டும் தொடங்க நெடுங்கால வைப்பு நிதியாக 100 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் இதற்காக நிதி திரட்டப்படுவதாகவும் அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.