இந்திய-சீன எல்லையில் வழி தவறி இந்தியாவுக்குள் நுழைந்த சீன வீரரை சீனாவிடம் இந்தியா ஒப்படைத்துள்ளது.சென்ற திங்கட்கிழமை லடாக் எல்லையில் உள்ள டெம்சோக் என்ற பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த சீன வீரரை இந்திய ராணுவத்தினர் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர், தன்னிலை மறந்து தடுமாற்றத்தில் இருந்தார். மோசமான வானிலையால் அவர் பாதிக்கப்பட்டிருந்தால் இந்திய ராணுவத்தினர் அவருக்கு முதலுத விகளைச் செய்தனர்.அவரது சுவாசத்தை சீர்ப்படுத்த பிராண வாயு அளிக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
கடந்த ஜூன் மாதம் லடாக் எல்லையில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது.அப்போதிலிருந்து இரு நாடு களுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.
இதையடுத்து எல்லைப் பூசலைத் தவிர்ப்பதற்காக இரு நாட்டு ராணுவமும் பல்வேறு சுற்றுப் பேச்சு வார்த்தைகளை நடத்தி வரும் வேளையில் சீன வீரர் ஒருவர் இந்தியாவுக்குள் நுழைந்த சம்பவம் நடந்துள்ளது. “சீன வீரர் பாதுகாப்பு நடைமுறைகளுடன் முறைப்படி புதன்கிழமை காலை ஒப்படைக்கப்பட்டார்,” என்று இந்திய ராணுவம் குறிப்பிட்டது. இதனை சீன ராணுவ நாளேடும் உறுதிப்படுத்தியுள்ளது.