புதுடெல்லி: கொரோனா கிருமித் தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனையை மேற்கொள்வதில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகளவில் குணமடைந்தோர் எண்ணிக்கையும் இந்தியாவில்தான் அதிகம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து சுமார் 6.70 மில்லியனுக்கும் அதிகமானோர் முழுமையாக குணமடைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
நாடு முழுவதும் இதுவரை 96 மில்லியன் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது சுமார் 750,000 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.
“கடந்த ஏழு நாட்களில் 10 லட்சம் மாதிரிகளில் 310 மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன. இது உலகளவில் ஒப்பிடும்போது பாதிப்பின் அளவு மிகக் குறைவு. இதேபோன்று இந்த காலகட்டத்தில் 10 லட்சத்தில் 83 உயிரிழப்புகளே பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுவும் மிகக் குறைவாகும்,” என்றார் ராஜேஷ் பூஷண்.
இதற்கிடையே கொரோனா கால கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு வரம்பு 10 விழுக்காடு உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வேட்பாளர்கள் செலவுத் தொகை வரம்பு ரூ. 70 லட்சத்திலிருந்து 77 லட்சமாக உயர்கிறது.