இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வானொலி மூலம் தமிழ்நாட்டில் தூத்துக்குடியைச் சேர்ந்த சிகை அலங்கார கடைக்காரர் ஒருவருடன் தமிழில் உரையாடி மகிழ்ந்தார். பிரதமர் மோடி, தான் பிரதமராகப் பதவி ஏற்றது முதல் ‘மனதின் குரல்’ என்ற வானொலி நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களுக்கு உரையாற்றி வருகிறார். திரு மோடி நேற்று தூத்துக்குடியைச் சேர்ந்த பொன் மாரியப்பன் என்பவருடன் ‘வணக்கம், நன்றாக இருக்கிறீர்களா’ என்று தமிழில் கைபேசி மூலம் நலம் விசாரித்தார்.
திரு மாரியப்பன் 8ஆம் வகுப்பு வரைதான் படித்து இருந்தாலும் தனது சிகை அலங்காரக் கடையில் பெரிய அளவில் நூலகத்தை அமைத்து எல்லாரும் புத்தகங்களைப் படிக்க ஊக்கப்படுத்தி வருகிறார். தன் கடைக்கு வந்து யார் அதிக புத்தகங்களைப் படிக்கிறார்களோ அவர்களிடம் குறைவான கட்டணத்தை அவர் வசூலிக்கிறார்.
இதன் மூலம் பிரபலம் அடைந்துள்ள மாரியப்பனுடன் தொடர்புகொண்ட பிரதமர், வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் திருக்குறள் படிக்க வேண்டும் என்றும் அந்த நூல் வாழ்க்கைக்கான வழிகாட்டி என்றும் பெருமிதத்துடன் தெரிவித்து இருக்கிறார்.அனைவரும் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் உள்நாட்டுப் பொருட்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திரு மோடி, கொவிட்-19ன் தாக்கம் இன்னமும் அதிகமாக இருப்பதால் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்திய கலாசாரம், காதி போன்ற இந்திய உடைகளுக்கு உலகளவில் முக்கியத்துவம் கூடி வருவதைச் சுட்டிய பிரதமர், புதுப்புது தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயிகள் புதிய வியாபார உத்திகளை உருவாக்கி மேம்படுவதற்குத் தோதாக சட்டங்கள் இயற்றப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியாவை ஒன்றிணைத்த சர்தார் வல்லபாய் பட்டேல் சிரமத்திலும் நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்பதைச் சுட்டிய திரு மோடி, இந்தச் சிரமமான காலகட்டத்திலும் மகிழ்ச்சியாக நாம் இருந்து வரவேண்டும் என்று குறிப்பிட்டார்.
தேசிய ஒருங்கிணைப்புக்கான நம்முடைய முயற்சிகள் தொடர வேண்டும் என்றார் அவர்.