இரு நாடுகளின் வெளியுறவு, தற்காப்பு அமைச்சர்கள் பங்குபெறும் ‘2+2’ சந்திப்பிற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோவும் தற்காப்பு அமைச்சர் மார்க் டி எஸ்பரும் இந்தியா சென்றுள்ளனர்.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் இன்று நடக்கவுள்ள அந்தச் சந்திப்பில் தற்காப்பு, பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றியும் இதர வட்டார, உலக விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும்.
இந்தியா-சீனா இடையே எல்லைப் பகுதியில் மோதல் நீடித்து வரும் வேளையில், அதுகுறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அமைச்சர்கள் இருவரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரையும் சந்திக்கவுள்ளனர்.
இருநாள் இந்தியப் பயணத்திற்குப் பின் மைக் பொம்பியோ இலங்கை, மாலத்தீவு, இந்தோனீசியா ஆகிய நாடுகளுக்குச் செல்லவிருக்கிறார்.
வட்டார அளவிலும் உலக அளவிலும் இந்தியா முக்கிய சக்தியாக வளர்ந்து வருவதை அமெரிக்கா வரவேற்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.
அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்குப் புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவுடன் மேலும் நெருக்கமாக செயல்படுவதற்குரிய சாத்தியக்கூறுகளை ஆராய இருப்பதாக குறிப்பிட்டார்.
ஐநா பாதுகாப்பு மன்றத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் இந்தியா செயல்பட இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், இவ்விஷயத்தில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா விரும்புவதாக தெரிவித்தார்.
தமது இந்திய பயணத்தின் போது அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளார் மைக் பொம்பியோ.
அமெரிக்க பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்பரும் இந்தியாவுக்கு வருகை தருகிறார். இருவரும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தற்காப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியையும் இதர அரசு மற்றும் தொழில்துறை பிரமுகர்களையும் சந்திக்க உள்ளனர். இந்தியா, அமெரிக்கா இடையேயான வியூகக் கூட்டணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று இந்திய ஊடகத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அச்சுறுத்தல்களை முறியடிக்க சுதந்திர நாடுகள் எப்படி இணைந்து பணியாற்ற முடியும் என்பது குறித்தும் மைக் பொம்பியோ ஆலோசனை நடத்துவார் எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் 29ஆம் தேதி இந்தியாவில் தமது பயணத்தை முடித்துக் கொண்டு, இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் இந்தோனீசியா ஆகிய நாடுகளுக்கும் அவர் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
நட்பு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவது அருமையான வாய்ப்பு என பொம்பியோ கூறியுள்ளார்.