புதுடெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் அவர் உறுதி செய்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா கிருமித் தொற்றால் ஏராளமான முக்கியப் பிரமுகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து தாம் நலமாக இருப்பதாகவும் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
“அண்மைக்காலங்களில் என்னை நேரில் சந்தித்தவர்கள் கவனமாக இருக்கவேண்டும். ரிசர்வ் வங்கியில் பணிகள் அனைத்தும் வழக்கம்போல் நடைபெறும்.
“இணையம், தொலைபேசி வசதிகள் மூலம் அனைத்து நாட்களிலும் நான் வங்கி அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பேன் என சக்தி காந்த தாஸ் தமது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.