பல நாடுகளில் கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால் அனைத்துலக பயணிகள் விமானச் சேவைக்கான தடையை நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஆணையம்.
ஆனால், விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்த அனைத்துலக சரக்கு விமானப் போக்குவரத்துக்குத் தடையில்லை. ‘வந்தே பாரத்’ திட்டம், ‘ஏர் பபல்’ ஏற்பாடுகளின் மூலம் இயக்கப்படும் அனைத்துலக விமானப் போக்குவரத்து திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா 18 நாடுகளுடன் விமான பயணத்துக்கான திட்டமிட்ட ஏற்பாட்டை செய்துள்ளது. இவற்றின் கீழ், 18 நாடுகளுடன் இருவழி விமானப் பயணங்கள் அனுமதிக்கப்படுகின்றன. வாரந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விமானச் சேவைகள் இந்தியாவுக்கும் அந்த நாடுகளுக்குமிடையே செயல்படுத்தப்படுகின்றன.