டெல்லியின் குருகிராம் நகரில் தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 21 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கு கடந்த 21 ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவரது பெற்றோர் அவரை குருகிராமில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு பெண்ணின் உடல்நிலை மோசமாகி, அவர் சுய நினைவை இழந்ததால் தீவிர சிகிச்சைப்பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை தனது தந்தையை அழைத்த அந்த இளம்பெண், தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் குற்றவியல் தண்டனைச் சட்டம் 376 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மருத்துவமனையில் விசாரணை நடத்தினர்.
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இளம்பெண் அளித்த தகவலின்படி அந்த நபரின் பெயர் விகாஸ் என்று தெரியவந்துள்ளது. கண்காணிப்பு கேமராவில் கிடைத்த தகவலின்படி அந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனால் அந்த நபர் மருத்துவமனையின் ஊழியர் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணையில் முழு ஒத்துழைப்பு நல்க மருத்துவமனை நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.